சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் விளையாடவுள்ள நிலையில், பரிசுத்தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான பரிசுத்தொகை குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் வெற்றிபெற்ற அணிக்கு ரூ.4.8 கோடி பரிசு அளிக்கப்பட்டது. அதேபோல் 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2.4 கோடி பரிசளிக்கப்பட்டது. இந்த நிலையில் 17வது சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசாக ரூ.20 கோடியும், 2வது இடத்தில் நிறைவு செய்யும் அணிக்கு ரூ. 13 கோடியும், 3வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7 கோடியும், 4வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசளிக்கப்படவுள்ளது.
அதேபோல் கடந்த சில சீசன்களில் பர்பிள் கேப்,. ஆரஞ்ச் கேப், எமர்ஜிங் பிளேயர் உள்ளிட்ட தனிப்பட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஆரஞ்ச் கேப் வெல்லும் வீரருக்கு ரூ.15 லட்சமும், பர்பிள் கேப் வெல்லும் வீரருக்கு ரூ.15 லட்சமும் அளிக்கப்படவுள்ளது.
அதேபோல் எமர்ஜிங் வீரருக்கு ரூ.20 லட்சமும், எம்விபி வீரருக்கு ரூ.12 லட்சமும், சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதுக்கு ரூ.15 லட்சமும், கேம் சேஞ்சர் விருதுக்கு ரூ.12 லட்சமும் அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் தொடருக்கான மொத்த பரிசுத்தொகையாக ரூ.46.5 கோடி அளிக்கப்படவுள்ளது. இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் சீசனை காட்டிலும் 17வது சீசனில் சுமார் 4 மடங்கு பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஃபார்முலா 1, கால்பந்து, டென்னிஸ், பேஸ்பால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் அதிக பரிசுத்தொகை அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதனால் கிரிக்கெட்டின் வளர்ச்சியும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்துள்ளது.