சென்னை : கேகேஆர் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கேகேஆர் - ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இன்னும் சில மணி நேரங்களில் ஐபிஎல் இறுதிப்போட்டி தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலை சென்னையில் மழை பெய்ததால், இரு அணிகளின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டன.

இதனால் ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஆட்டம் தொடங்குவதற்கு தாமதமானால், கூடுதலாக 120 நிமிடங்கள் சேர்க்கப்பட்டு ஆட்டத்தை நடத்த முடிவு செய்யப்படும். இதன் மூலம் மழையால் பாதிக்கப்பட்ட நேரத்தை எளிதாக சமன் செய்ய முடியும்.
ஒருவேளை 120 நிமிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டும் ஆட்டத்தை இன்றே நிறைவு செய்ய முடியவில்லை என்றால், ஆட்டம் ரிசர்வ் நாளுக்கு மாற்றப்படும். ஒருவேளை ரிசர்வ் நாளிலும் ஆட்டம் நடக்கவில்லை என்றால், சூப்பர் ஓவர் மூலமாக வெற்றியாளரை முடிவு செய்வார்கள். ஆனால் சூப்பர் ஓவர் கூட வீச முடியாத அளவிற்கு வானிலை மற்றும் மைதானம் இருந்தால், புள்ளிப்பட்டியலில் அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கு சாம்பியன் பட்டம் அளிக்கப்படும்.
புள்ளிப்பட்டியல் அடிப்படையில் கேகேஆர் அணி முதல் இடத்திலும், ஐதராபாத் அணி இரண்டாவது இடத்திலும் நிறைவு செய்தன. இதனால் கேகேஆர் அணிக்கு சாதகம் ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி மழை காரணமாக ரிசர்வ் நாளில் நடந்தது. பின்னர் 2வது நாளிலும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், போட்டி 15 ஓவர்களாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.