சென்னை : கேகேஆர் அணியில் உள்ள இந்திய வீரர்களின் எழுச்சிக்கு துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கேகேஆர் அணி வென்றுள்ளது. இதற்காக கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர், பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் உள்ளிட்டோரை பாராட்டி வருகின்றனர். ஆனால் கேகேஆர் அணியின் வெற்றியில் இந்திய இளம் வீரர் பங்கு அதிகமாக இருந்தது. வெங்கடேஷ் ஐயர், ஹர்சித் ராணா, வைபவ் அரோரா, ரகுவன்ஷி, அனுகுல் ராய், ரமன்தீப் சிங், ஷகிப் ஹுசைன், சேட்டன் சக்காரியா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை கொண்டு வந்தது அபிஷேக் நாயர் தான்.

அதேபோல் இந்திய இளம் பந்துவீச்சாளர்களை பட்டை தீட்டி சிறப்பாக செயல்பட காரணமாக அமைந்தது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண். அவர் கேகேஆர் அணிக்கு வந்த பின் இளம் இந்திய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு கேகேஆர் அணியுடன் அபிஷேக் நாயகர் இணைந்தார். கேகேஆர் அணியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக பொறுப்பேற்ற போது, கூடவே அபிஷேக் நாயரை அழைத்து வந்தார்.
ஏனென்றால் தினேஷ் கார்த்திக் பேட்டிங் ஃபார்மை இழந்து தவித்த போது மும்பைக்கு சென்று அபிஷேக் நாயரின் வீட்டிலேயே தங்கி பயிற்சி எடுத்து வந்தார். அதேபோல் நிதிஷ் ராணா காயம் காரணமாக விளையாடாமல் இருந்த போது, அவரது இடத்தில் ரகுவன்ஷியை களமிறக்கும் யோசனையை கொண்டு வந்ததும் அபிஷேக் நாயர் தான். ஏனென்றால் யு19 கிரிக்கெட்டரான ரகுவன்ஷி மும்பையில் உள்ள அபிஷேக் நாயரிடம் பிரத்யேக பயிற்சியை எடுத்து வருகிறார்.
அதேபோல் கடந்த மெகா ஏலத்தின் போது வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி இருவரையும் கேகேஆர் அணி தக்க வைக்கப்படுவதற்கு அபிஷேக் நாயர் காரணமாக இருந்தார். மும்பை அணியில் எப்படி 7 இந்திய நட்சத்திர வீரர்கள் விளையாடி வருகிறார்களோ, அதற்கு சமமான திறமையுடன் கேகேஆர் அணியில் இந்திய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் கவுதம் கம்பீரை கொண்டாடும் ரசிகர்கள் அபிஷேக் நாயரின் பங்களிப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று விமர்சகர்களின் குரல்கள் எழுந்துள்ளன.