லக்னோ : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் இல்லாமல் நிக்கோலஸ் பூரன் களமிறங்கியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் லக்னோ அணி முதல்முறையாக சொந்த மண்ணில் விளையாடுவதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லக்னோ அணி நடப்பு சீசனில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ் போடுவதற்காக இரு அணிகளின் கேப்டன்களும் மைதானத்திற்கு வந்த போது, லக்னோ அணி சார்பாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். இதனால் எல்எஸ்ஜி கேப்டன் கேஎல் ராகுலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்தது. தொடர்ந்து டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் விளையாட விரும்பிகிறோம். இந்த பிட்ச் நன்றாக இருப்பதால், முதல் பேட்டிங் செய்து இலக்கை நிர்ணயிக்க விரும்புகிறோம். கேஎல் ராகுல் ஏற்கனவே காயத்தில் இருந்து வருவதால், அவருக்கு சிறிய பிரேக் கொடுக்க விரும்புகிறோம். ஆனால் இன்றைய ஆட்டத்தில் இன்பேக்ட் பிளேயராக களமிறங்குவார் என்று தெரிவித்தார்.
பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், நாங்கள் முதலில் பவுலிங் செய்யவே விரும்பினோம். நேற்று இந்த மைதானத்தில் இருந்த போது அதிகளவிலான பனிப்பொழிவு இருந்தது. பேட்டிங்கின் போது கொத்து கொத்தாக விக்கெட் கொடுக்க கூடாது. பவர் பிளே ஓவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் இருவரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் குர்ணால் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்ட நிலையில், நடப்பு சீசனில் நிக்கோலஸ் பூரன் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே எம்எல்சி தொடரில் மும்பை நியூயார்க் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.