டெல்லி : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் டெல்லியில் இன்று சந்திக்கவுள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஐசிசி தரப்பில் மே 1ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை இந்திய அணி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே டெல்லி - மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தை பார்க்க தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் டெல்லிக்கு வந்தார். இதனால் இன்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பொறுத்தவரை விக்கெட் கீப்பருக்கான ரேஸ் சூடுபிடித்துள்ளது. ஏனென்றால் ஆஃப்கானிஸ்தான் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஜித்தேஷ் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மோசமான நிலையில் உள்ளது. இதனால் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இருக்கின்றனர்.
இதில் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டர் வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் என்பதால், அவர் முதன்மை வாய்ப்பாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் பேக் அப் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல் ராகுல் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் 9 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள் உட்பட 385 ரன்களை விளாசி இருக்கிறார்.
மறுபக்கம் கேஎல் ராகுல் 9 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உட்பட 378 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் கேஎல் ராகுல் இந்திய டி20 அணியில் விளையாடவில்லை. இதனால் நேரடியாக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்படுவாரா அல்லது சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.