லக்னோ : லக்னோ அணியின் துணை கேப்டனாக க்ருணால் பாண்டியா நீக்கப்பட்டு அவரது பதவியை நிக்கோலஸ் பூரனுக்கு கேப்டன் கேஎல் ராகுல் அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 வாரங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நிர்வாக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மற்றும் அணிக்குள்ளும் பல்வேறு மாற்றங்களை உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் லக்னோ அணியின் செயல்பாடுகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் லக்னோ அணியை பிரபலப்படுத்தும் நோக்கில் நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்வதில் அந்த அணியின் உரிமையாளர் கொயங்கா தீவிரமாக உள்ளார். இதன் காரணமாகவே ஜஸ்டின் லாங்கர், ஷமார் ஜோசப், லான்ஸ் க்ளூசினர் உள்ளிட்டோரை ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது முக்கியமான மாற்றத்தை லக்னோ அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
வழக்கமாக ஐபிஎல் தொடரில் இந்திய கேப்டன்களை நியமனம் செய்யவே அனைத்து அணி நிர்வாகங்களும் விரும்புவார்கள். ஏனென்றால் இந்திய வீரர்களை கேப்டனாக நியமிக்கும் போது வணிக ரீதியிலான ஒப்பந்தங்களை எளிதாக மேற்கொள்ள முடியும். அதன் காரணமாகவே லக்னோ அணி புதிதாக களமிறங்கிய போது கேஎல் ராகுலை கேப்டனாக கொண்டு வந்தது.
அவருக்கு உறுதுணையாக இருக்க துணை கேப்டனாக க்ருணால் பாண்டியாவை லக்னோ அணி நிர்வாகம் நியமனம் செய்தது. மும்பை அணிக்காக ஆடிய அனுபவம் மற்றும் ஆல்ரவுண்டராக க்ருணால் பாண்டியாவின் பங்கு அதிகம் என்பதோடு நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்துமே அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட காரணம். கடந்த சீசனில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகினார்.
அப்போது கடைசி கட்ட லீக் போட்டி மற்றும் ப்ளே ஆஃப் சுற்றில் லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்டார் க்ருணால் பாண்டியா. இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு க்ருணால் பாண்டியாவை துணை கேப்டன் பதவியில் இருந்து லக்னோ அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே எம்எல்சி, சிபிஎல், எமிரேட்ஸ் லீக் என்று பல்வேறு லீக் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் நிக்கோலஸ் பூரன். வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாகவும் பூரன் செயல்பட்டிருக்கிறார். இதனால் அவரின் அனுபவத்தையும், நட்சத்திர அந்தஸ்தையும் பயன்படுத்தும் வலையில் லக்னோ அணி நிர்வாகம் க்ருணால் பாண்டியாவை கழற்றிவிட்டுள்ளது. எப்படி ஹர்திக் பாண்டியாவின் நட்சத்திர அந்தஸ்து எகிறிய போது மும்பை அணி கேப்டனாக நியமித்துள்ளதோ, அதே பாணியில் லக்னோ அணியின் முடிவு எடுத்துள்ளது.