லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய அணியாக களமிறங்கிய லக்னோ அணி இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. மேலும் கடந்த சீசனில் மென்டராக இருந்த கௌதம் கம்பீர் தற்போது விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், லக்னோ அணியின் பலம் பலவீனம் குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது

லக்னோ அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் கே எல் ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஷிப்பை சிறப்பாக செயல்பட்டு அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தந்தால் அவருக்கும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் டி20 உலக கோப்பை ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் தொடங்குகிறது.
இதற்கான அணியில் இடம்பெற வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். காயத்திலிருந்து கே.எல் ராகுல் தற்போது முழுமையாக குணமடைந்து வருகிறார். அவர் பயிற்சி முகாமில் பந்துகளை எந்த ஒரு வலியும், சிரமும் இன்றி நன்றாக அடித்து வருகிறார். எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. என்று சில வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் எங்களிடம் நவீன் உல் ஹக், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சம்மர் ஜோசப், மோஷின் கான், சிவம் மவி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நன்றாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் இருக்கிறார். இதேபோன்று தமிழக வீரர் எம் சித்தார்த் பயிற்சி முகாமில் தான் வீசிய முதல் ஓவரிலே மைடன் பந்தை வீசினார்.
இதைப்போன்று கிருஷ்ணப்பா கௌதம் அணியில் இருக்கிறார். இதனால் தங்களுடைய அணி இம்முறை சிறப்பாக செயல்படும் என்று தாம் நம்புவதாக ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். லக்னோ அணியிலிருந்து கம்பீர் விலகிய போது தாம் ஏமாற்றம் அடைந்ததாகவும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு தற்போது நன்றாக தூங்குகிறேன் என்றும் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.