லக்னோ : சிஎஸ்கே அணியின் இம்பேக்ட் பிளேயராக உள்ளூர் கிரிக்கெட்டர் சமீர் ரிஸ்வி களமிறக்கப்பட்ட நிலையில், வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தரப்பில் ரஹானே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரச்சின் ரவீந்திரா டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், தொடர்ந்து வந்த கேப்டன் ருதுராஜ் 17 ரன்களில் வெளியேறினார்.

இருப்பினும் ரஹானே - ஜடேஜா இருவரும் இணைந்து பவர் பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ரஹானே 36 ரன்கள் எடுத்திருந்த போது, க்ருனால் பாண்டியாவை அட்டாக் செய்ய நினைத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சிவம் துபே 3 ரன்களில் வெளியேற, 87 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் இருந்தது.
இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகமும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து உள்ளூர் கிரிக்கெட் வீரரான சமீர் ரிஸ்வியை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கினர். இவர் ஏற்கனவே குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் பவுலிங்கில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தவர் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணியை கரை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவர் 4 பந்துகளில் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், ஸ்பின்னரான க்ருனால் பாண்டியா மீண்டும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். இவரை முதல் பந்திலேயே அட்டாக் செய்ய நினைத்த சமீர் ரிஸ்வி, டவுன் தி ட்ராக் இறங்கி வந்தார். ஆனால் சமீர் ரிஸ்வி இறங்கி வருவதை அறிந்த க்ருனால் பாண்டியா, லெந்தை கொஞ்சம் ஷார்ட்டாக வீசினார். இதனால் பந்து சமீர் ரிஸ்வியை ஏமாற்றி விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கைகளில் புகுந்தது.
அதனை லாவகமாக பிடித்த கேஎல் ராகுல் எளிதாக ஸ்டம்பிங் செய்து சமீர் ரிஸ்வியை வெளியேற்றினார். இதனால் இம்பேக்ட் பிளேயராக வந்த சமீர் ரிஸ்வி எந்தவித இம்பேக்டையும் கொடுக்காமல் 1 ரன்னில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.