லக்னோ : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனியால் 2 முதல் 3 ஓவர்கள் வரை கேமியோ மட்டுமே விளையாட முடியும் என்று பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 3வது தோல்வியை சந்தித்துள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் எந்த திட்டமும் பலனளிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் மோசமாக செயல்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் பிளெமிங் இருவரும் திட்டமிடலில் சொதப்பி வருவதாக விமர்சித்து வருகின்றனர். தோனியின் கேமியோ ஆட்டத்தால் சிஎஸ்கே அணி ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களில் இருந்து தப்பி வருவதாகவும் சில கருத்துகள் வெளி வந்துள்ளது.
இந்த சீசனில் 5 முறை பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள தோனி 33 பந்துகளில் 87 ரன்களை விளாசி இருக்கிறார். நேற்றைய ஆட்டத்திலும் கடைசி நேரத்தில் வந்த தோனி, 9 பந்துகளில் 2 சிக்ஸ், 3 ஃபோர்ஸ் உட்பட 28 ரன்களை விளாசினார். இதனால் தோனியின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் பேசுகையில், கடந்த சீசனின் போது தோனியின் கால்களில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தில் இருந்து தோனி இதுவரை முழுமையாக மீண்டு வரவில்லை. இதன் காரணமாகவே தோனி குறைந்த அளவிலான பந்துகளையே எதிர்கொள்கிறார். ரசிகர்களை போல் நாங்களும் தோனி அதிக நேரம் களத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஆனால் தோனி களமிறங்கும் நேரம் சரியானது தான். இந்த சீசனில் நிச்சயம் தோனி சிஎஸ்கே அணிக்கு அவசியமான தேவையாக இருக்கிறார். கடைசி நேரத்தில் வந்து 2 முதல் 3 ஓவர்களை விளையாட வேண்டிய ரோலில் இருக்கிறார். அந்த இடத்தில் விளையாடுவதற்கு தோனியை விடவும் சிறந்த வீரர் யாரும் கிடையாது. தோனியை மேல் வரிசையில் களமிறக்குவதற்கு பதிலாக, மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்து விளையாட வேண்டும்.
மற்ற வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து ஃபினிஷிங் பொறுப்பை தோனியிடம் கொடுக்கலாம். அங்கிருந்து தோனியால் நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த சீசனில் களமிறங்கும் ஒவ்வொரு முறையும் தோனி சிறப்பாக செயல்பட்டுள்ளார். தோனி களமிறங்கும் போது மைதானத்தின் சூழலே வேறு மாதிரி மாறிவிடுகிறது. நிச்சயம் தோனியின் சாதனையை நினைத்து அனைவரும் பெருமை கொள்கிறோம். அவருக்கு கிடைக்கும் அன்புக்கு உரியவராக தோனியும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.