லக்னோ : டெல்லி அணியில் இருந்திருந்தால் பிரித்வி ஷாவை அடி வெளுத்திருப்பேன் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்து வென்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருந்த டெல்லி அணி 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றிக்கு டெல்லி அணியின் அறிமுக வீரர் ஜேக் ஃபிரேசர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் ஆட்டம் முக்கியமாக அமைந்தது. அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷாவும் 22 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து அசத்தினார். பிரித்வி ஷாவின் அதிரடியான ஆட்டம் காரணமாகவே டெல்லி அணி பவர் பிளே ஓவர்களில் 62 ரன்களை குவிக்க முடிந்தது.
ஆனால் நன்றாக விளையாடிய பிரித்வி ஷா, பவர் பிளே முடிவடைந்த அடுத்த ஓவரிலேயே ரவி பிஷ்னாய் பவுலிங்கில் பூரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அந்த நேரத்தில் பிரித்வி ஷா தேவையில்லாமல் அந்த ஷாட்டை விளையாடி டெல்லி அணியையும் சிரமத்திற்கு உள்ளாகினார். இந்த சீசனில் நல்ல தொடக்கம் கிடைத்த போதும் பிரித்வி ஷா, இதுவரை எந்த இன்னிங்ஸையும் பயன்படுத்தி கொள்ளவில்லை.
இதுகுறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், களத்தில் பிரித்வி ஷா என்ன செய்து வருகிறார்.. நான் மட்டும் டெல்லி அணி நிர்வாகத்தில் இருந்திருந்தால், நிச்சயம் தொடர்ச்சிய அடி கொடுத்திருப்பேன். நல்ல நிலையில் பேட்டிங் ஆடும் போது, அப்படியொரு ஷாட் விளையாட வேண்டிய அவசியமே இல்லை. இதனால் டெல்லி அணியையும் அவர் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார்.
நாம் நன்றாக பேட்டிங் செய்யும் போது, அந்த இன்னிங்ஸை பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும். பிரித்வி ஷா நன்றாக பேட்டிங் செய்யும் போதே, திடீரென ஒரு மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழப்பதை வழக்கமாகி வைத்துள்ளார். இதனை பிரித்வி ஷா மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரின் முதல் சீசனின் போது ஹர்பஜன் சிங் மும்பை அணிக்காக ஆடிய போது, பஞ்சாப் அணிக்காக ஆடிய ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்தது குறிப்பிடத்தக்கது.