லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் இந்திய அணியிலும் முக்கிய வீரராக இருக்கிறார். ஆனால், அவரது டி20 பேட்டிங் செயல்பாடு சரியில்லை எனக் கூறி அவரை இந்திய டி20 அணியில் தேர்வு செய்யக் கூடாது என்ற விமர்சனம் எழுந்தது.
குறிப்பாக அவர் டி20 போட்டிகளில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்க்கிறார் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. ரசிகர்கள் சிலர் அவரை ஐபிஎல் தொடரின் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்றெல்லாம் கிண்டல் செய்தனர். இதை அடுத்து தனது நிலையை உணர்ந்த கே எல் ராகுல், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தை ஆடி வியக்க வைத்தார்.

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில் லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டாய் சரிந்த நிலையில் கே எல் ராகுல் மட்டும் அதிரடி ஆட்டம் ஆடி 22 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.
கே எல் ராகுல் ஐந்து ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். அதாவது நான்கு பந்துகளுக்கு ஒரு பவுண்டரி அடித்து தன்னாலும் அதிரடி ஆட்டம் ஆட முடியும் என நிரூபித்தார். அவர் ரன் குவித்து அதிசயம் நிகழ்த்திய அதே நேரத்தில் லக்னோ அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து படுமோசமான பேட்டிங் சரிவை சந்தித்தது. தேவ்தத் படிக்கல் 3, மார்கஸ் ஸ்டோனிஸ் 8, நிக்கோலஸ் பூரன் 0 என சொற்ப ரன்களில் முக்கிய விக்கெட்கள் சரிந்தன. இம்பாக்ட் பேட்ஸ்மேனாக வரவழைக்கப்பட்ட தீபக் ஹூடாவும் 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதன் பின் ஆயுஷ் பதோனி அபார ஆட்டம் ஆடி 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்து லக்னோ அணியை காப்பாற்றினார். 20 ஓவர்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.