லக்னோ : லக்னோ அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் டி காக் - கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டெல்லி அணி சார்பாக முதல் ஓவரை கலீல் அஹ்மத் வீசினார்.

முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து டி காக் அதிரடியாக தொடங்க, வழக்கத்திற்கு மாறாக கேஎல் ராகுல் பவுண்டரி, சிக்ஸ் என்று வெளுத்து கட்டினார். முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், டி காக் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்காளில் ஆட்டமிழக்க, லக்னோ அணி தரப்பில் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார்.
7 ஓவர்களில் லக்னோ அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட், நட்சத்திர ஸ்பின்னர் குல்தீப் யாதவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய 3வது பந்திலேயே ஸ்டாய்னிஸ் 8 ரன்களில் வெளியேற, தொடர்ந்து வந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் அடுத்த பந்திலேயே போல்டாகி வெளியேறினார். இதனால் ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் பூரன் மிரண்டு நின்றார்.
அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், திடீரென இம்பேக்ட் பிளேயராக தீபக் ஹூடாவை களமிறக்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். குல்தீப் யாதவின் ஒரே ஓவரால் லக்னோ அணியின் திட்டமே மொத்தமாக மாறியது. இதன்பின் மீண்டும் குல்தீப் யாதவ் வீசிய 2வது ஓவரில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 22 பந்துகளில் 39 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கண் மூடி திறப்பதற்குள் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
காயத்திற்கு பின் முதல் போட்டியில் களமிறங்கிய குல்தீப் யாதவ் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்து அசத்தினார். சிறப்பாக பவுலிங் செய்த குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 10 டாட் பால்கள் உட்பட 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். லக்னோ அணியின் முதுகெலும்பாக இருக்கும் பூரன், ஸ்டாய்னிஸ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தியது பாராட்டுகளை பெற்று வருகிறது.