டெல்லி : லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இருவரும் ஆவேசமாக பேசிய விவகாரம் குறித்து பயிற்சியாளர் லான்ஸ் க்ளூசினர் விளக்கம் அளித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் அதிருப்தியடைந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, மைதானத்தில் வைத்தே கேஎல் ராகுலை ஆவேசமாக பொளந்து கட்டினார். கேமராக்கள் இருப்பதை பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல், கேப்டனை இப்படி கேள்வி எழுப்பியது ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் லக்னோ அணி நாளை நடக்கவுள்ள போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டிக்காக லக்னோ அணி வீரர்கள் அனைவரும் டெல்லிக்கு பயணித்தனர்.
ஆனால் லக்னோ அணி வீரர்கள் கேஎல் ராகுல் பயணிக்கவில்லை என்றும், அதற்கு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லக்னோ அணியின் துணை பயிற்சியாளர் லான்ஸ் க்ளூசினர், கேஎல் ராகுல் - சஞ்சீவ் கோயங்கா இடையிலான உரையாடல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், இரு தீவிரமான கிரிக்கெட் லவ்வர்களுக்கு இடையிலான இப்படியான ஒரு உரையாடல் நடந்ததில் எந்த தவறும் கிடையாது. இதனை பெரிதுப்படுத்த தேவையில்லை என்றே நினைக்கிறேன். அதேபோல் லக்னோ அணியின் கவனம் முழுவதும் எதிர் வரும் போட்டிகளில் தான் உள்ளது. எங்களின் பாதை சரியாக தெரியும்.
அடுத்த 2 போட்டிகளில் லக்னோ அணி வெல்ல வேண்டும். அதேபோல் சில போட்டிகளில் எங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்க வேண்டும். டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது எளிதல்ல. கேப்டன் ரிஷப் பண்ட்-ம் வருவதால், டெல்லி அணியின் பலம் நிச்சயம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.