லக்னோ : ஆண்டுக்கு ரூ.400 கோடி லாபம் வரும் போது கேப்டன் கேஎல் ராகுலிடம் கோபத்தை வெளிப்படுத்துவது ஏன் என்று லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை சேவாக் விமர்சித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்துள்ள லக்னோ அணி, அடுத்த 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனிடையே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயாங்கா, கேப்டன் கேஎல் ராகுலை காட்டமாக விளாசினார்.

100 கேமராக்கள் இருக்கும் போதே, கேப்டன் கேஎல் ராகுலை ஏளனமாக சைகை காட்டி கோபத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு கேஎல் ராகுல் நிதானமாக பதிலளித்த போதும், சஞ்சீவ் கோயங்கா அடங்கவே இல்லை. இந்தியாவுக்காக விளையாடி வரும் முன்னணி வீரரை ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் மைதானத்தில் வைத்தே விளாசியது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக கேஎல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்த சீசனில் கேஎல் ராகுல் விடுவிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரர் சேவாக் பேசுகையில், என்னை பொறுத்த வரை சஞ்சீவ் கோயங்கா கிரிக்கெட் போட்டிகளின் திட்டங்களை மூக்கை நுழைக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் சஞ்சீவ் கோயங்கா ஒரு தொழிலதிபர். அவர்களுக்கு லாபம், நஷ்டம் மட்டுமே புரியும்.
ஆனால் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை நஷ்டம் என்பதே கிடையாது. அதனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை லாபம் மட்டுமே வருகிறது. அதில் ஐபிஎல் போன்ற விஷயங்களில் சஞ்சீவ் கோயங்கா எந்த பணியையும் செய்ய தேவையில்லை. அனைத்திற்கும் தேவையானதை பணியாளர்கள் எளிதாக செய்துவிடுவார்கள். என்ன நடந்தாலும், அணி உரிமையாளர்களுக்கு லாபம் மட்டும் நிச்சயம்.
இதுபோன்ற விஷயங்களில் வீரர்களிடம் சலிப்புதன்மை ஏற்படும். இந்த அணியில் இருந்து வெளியேறினால், மற்றொரு அணி தன்னை வாங்கி கொள்ளும் என்று நினைக்க தொடங்குவார்கள். ஒரு அணி நட்சத்திர வீரரை இழக்கும் போது, அந்த அணியின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும். நான் பஞ்சாப் அணிக்காக ஆடிய போது 5வது இடத்தில் நிறைவு செய்தோம். அதன்பின் பஞ்சாப் அணி ஒருமுறை கூட 5வது இடத்தில் நிறைவு செய்யவில்லை என்று தெரிவித்தார்.