லக்னோ : தமிழக வீரர் சாய் சுதர்ஷனை அவுட் ஆக்கப் பார்த்தார் பார்த்தார் சுப்மன் கில். பின்னர் தன் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கோரினார்.
2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் குவித்தது. குஜராத் அணிக்கு 164 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
குஜராத் அணியின் பேட்டிங்கின் போது துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் பிட்ச்சை கணித்து ஆட திணறினார். அவரால் சரியாக ரன் குவிக்க முடியவில்லை. ஆனால், அந்த அணியின் மற்றொரு துவக்க வீரரான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் தெளிவாக பிட்ச்சை கணித்து ரன் சேர்த்தார்.

சுப்மன் கில் பவுண்டரி அடிக்க முடியாத நிலையில் ஒற்றை ரன்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டினார். சில சமயம் இரண்டு ரன்கள் ஓட முயன்றார். அதன் மூலம் தன் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த நினைத்தார். அதற்காக ரிஸ்க் எடுத்து ஒரு முறை 2 ரன்கள் ஓடினார் கில். அப்போது சாய் சுதர்ஷன் வேகமாக ஓடி ரன் அவுட் ஆகாமல் தப்பினார்.
அதே போன்ற சம்பவம் 5வது ஓவரில் மீண்டும் நடந்தது. சாய் சுதர்ஷன் வேகமாக ஓடி கிரீஸை நோக்கிப் பாய்ந்து ரன் அவுட்டில் இருந்து தப்பினார். அப்போது லக்னோ அணியின் ஃபீல்டர் நேரடியாக ஸ்டம்ப்பில் படும்படி பந்தை வீசி இருந்தால் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்து இருப்பார். உடனடியாக தன் தவறை உணர்ந்தார் சுப்மன் கில், சாய் சுதர்ஷனிடம் மன்னிப்பு கேட்டார்.
அதன் பின்னரும் ரன் சேர்க்க திணறிய சுப்மன் கில் 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்ஷன் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் விக்கெட்டை பறி கொடுத்தனர். ராகுல் டேவாட்டியா 25 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். 18.5 ஓவரில் குஜராத் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சுப்மன் கில்லின் நிதான ஆட்டம் அந்த அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக மாறியது.