கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பேட்டிங் மோசமாக இருந்த நிலையில் நிக்கோலஸ் பூரன் மட்டும் தனி ஆளாக அணியை கரை சேர்க்கப் போராடினார்.
கடைசி ஓவர் வரை தனது அதிரடி ஆட்டத்தால் 45 ரன்கள் சேர்த்து இருந்தார். கடைசி ஓவரில் அவர் 20 ரன்களுக்கும் மேல் கூட சேர்க்கக் கூடியவர் என்பதால் லக்னோ அணி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், கொல்கத்தா அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவர் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் துவக்க வீரர் டி காக் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூட 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் ஆயுஷ் பதோனி முன்பே களமிறங்கினார். அவர் அதிரடி ஆட்டம் ஆட முடியாமல் திணறினார். 27 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கேப்டன் கே எல் ராகுல் அதிரடி ஆட்டம் ஆடி 27 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். பின்னர் மார்கஸ் ஸ்டோனிஸ் 10 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஓவர்களில் ரன் குவிக்க முடியாமல் திணறியதே விக்கெட்கள் சரிய முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில் நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் இரண்டு ஃபோர், நான்கு சிக்ஸ் அடித்து 32 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்ததால் லக்னோ அணி பெரிய ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டது. கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது லக்னோ அணி. லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிட்செல் ஸ்டார்க் கடைசி ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.