லக்னோ : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் இருந்து கிட்டத்தட்ட மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. லக்னோவில் நடைபெற்ற 48வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பர்த்டே பாய் ரோகித் சர்மா நான்கு ரன்களிலும், அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் 10 ரன்களிலும், திலக் வர்மா ஏழு ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் மைதானத்திற்கு கோபமாக வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கோல்டன் டக் ஆகி முதல் பந்திலே வெளியேறினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நெஹல் வத்ரே உடன் தொடக்க வீரஎ இசான் கிஷன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார்.
36 பந்துகளை எதிர் கொண்ட இசான் கிஷன் 32 ரன்கள் மட்டுமே சேர்த்தார். நெஹல் வத்ரே 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து களம் இறங்கிய லக்னோ அணியில் அர்ஷின் குல்கர்னி டகவுட் ஆகி வெளியேற கேப்டன் கே எல் ராகுல் 22 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார்.
டி20 உலக கோப்பையில் கே.எல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் அவர் வெறும் 3 பவுண்டரி ஒரு சிக்சர் மட்டுமே அடித்து ஸ்ட்ரைக் ரேட் 127 என்ற அளவில் வைத்திருந்தார். இதை அடுத்து களமிறங்கிய மார்க் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடியது. தீபக் ஹூடா 18 ரன்கள் ஆட்டம் இழக்க மார்க்கஸ் ஸ்டோனிஸ் 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் ஆயுஷ் பலூன் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் சர்ச்சைக்குள்ளான வகையில் ரன் அவுட் என மூன்றாம் நடுவரால் அறிவிக்கப்பட்டார். நிக்கோலஸ் பூரான், குர்னல் பாண்டியா ஆகியோர் அபாரமாக விளையாடி லக்னோ அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் ஏழாவது தோல்வியை பெற்றிருக்கிறது.
10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் மூன்று வெற்றியை மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் மற்ற அணிகளின் தயவு தேவைப்படும்.