லக்னோ : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 31 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் டி காக் 8 ரன்களில் ஆட்டமிழக்க, 2வது ஓவரில் நட்சத்திர வீரர் ஸ்டாய்னிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதனால் லக்னோ அணி 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கேஎல் ராகுல் - தீபக் ஹூடா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, லக்னோ அணி 6 ஓவர்கள் முடிவில் 46 ரன்கள் சேர்த்திருந்தது. அந்த நேரத்தில் கேப்டன் கேஎல் ராகுல் 19 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.
இந்த நிலையில் 8வது ஓவரை வீச ஆவேஷ் கான் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் கேஎல் ராகுல் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 21 ரன்களை விளாசி ஆட்டத்தையே மாற்றினார். அதன்பின் சாஹல் பவுலிங்கில் அசத்தலாக பவுண்டரி அடித்து கேஎல் ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் மூலமாக கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக 4 ஆயிரம் ரன்களை எட்டி அசத்தியுள்ளார்.
இந்த சாதனையை படைக்கும் 3வது இந்திய வீரர் கேஎக் ராகுல் தான். அதேபோல் இதுவரை ஐபிஎல் தொடரில் 169 பேட்ஸ்மேன்கள் தொடக்க வீரராக களமிறங்கியுள்ள நிலையில், கேஎல் ராகுலின் பேட்டிங் சராசரி தான் முதலிடத்தில் உள்ளது. தற்போது கேஎல் ராகுலின் பேட்டிங் சராசரி 50.125ஆக உள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.