லக்னோ : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் நட்சத்திர வீரர் ஸ்டாய்னிஸ் டக் அவுட்டாகி வெளியேறிய சம்பவம் சிஎஸ்கே ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 44வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். லக்னோ மைதானம் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ரசிகர்களிடையே போட்டி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த நிலையில் லக்னோ அணி தரப்பில் கேஎல் ராகுல் - டி காக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் முதல் ஓவரை வழக்கம் போல் போல்ட் வீசினார். இந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் 2 பவுண்டரிகளை டி காக் விளாசினார். இந்த நிலையில் 3வது பந்தில் டி காக் விக்கெட்டை வீழ்த்தி போல்ட் மரண மாஸ் கம்பேக் கொடுத்தார். இதன்பின் உடனடியாக நட்சத்திர வீரர் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். இதன்பின் 2வது ஓவரை வீச சந்தீப் சர்மா அழைக்கப்பட்டார்.
இந்த ஓவரின் கடைசி பந்தை சந்தீப் சர்மா ஸ்விங் செய்து திருப்ப, அதனை தவறாக கணித்து ஸ்டாய்னிஸ் பேட்டை வீசினார். ஆனால் அந்த பந்து ஸ்டாய்னிஸை ஏமாற்றி, மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் நட்சத்திர வீரர் ஸ்டாய்னிஸ் 4 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் லக்னோ அணி 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஸ்டாய்னிஸ் டக் அவுட்டாகி வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் லக்னோ அணியின் ஸ்டாய்னிஸ் இதேபோல் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கி 63 பந்துகளில் 6 சிக்ஸ், 13 ஃபோர்ஸ் உட்பட 124 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்து வெற்றிபெற வைத்தார்.
சதம் விளாசிய அடுத்த போட்டியிலேயே ஸ்டாய்னிஸ் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் பலரும் சிஎஸ்கே அணியின் பவுலர்களை பொளந்து கட்டி வருகின்றனர். ஏனென்றால் ஸ்டாய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் சிஎஸ்கே அணி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.