லக்னோ : ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளுக்கு பின் ராஜஸ்தான் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் 48 பந்துகளில் 76 ரன்களும், தீபக் ஹூடா 31 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்தனர்.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் கடந்த 7 போட்டிகளாக ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் தவித்து வந்த ராஜஸ்தான் அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்த சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட இடைவேளைக்கு பின் 2வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அதன்பின் டெல்லி, மும்பை, ஆர்சிபி, குஜராத், பஞ்சாப், கொல்கத்தா மற்றும் மும்பை என்று 7 போட்டிகளுக்கு பின் மீண்டும் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
தீபக் ஹூடா சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்திருந்த நிலையில், அஸ்வின் அவரை வீழ்த்தி அசத்தினார். இந்த சீசனில் அஸ்வின் கட்டுக்கோப்பாக பவுலிங் செய்திருந்தாலும், விக்கெட் வீழ்த்த முடியாமல் தவித்து வந்தார். இதனால் அஸ்வினை ராஜஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
அதேபோல் ராஜஸ்தான் அணி பவுலிங்கின் போது பெரும்பாலும் 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதனால் அஸ்வின் கட்டுக்கோப்பாக வீசி அழுத்தத்தை ஏற்படுத்தி கொடுக்கும் போது, அது மற்ற வீரர்களுக்கு பயனளிக்கிறது. இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், அஸ்வின் விக்கெட் வீழ்த்த முடியாததால் நான் அவருடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர் சிறந்த தொழில்முறை வீரர். எங்களின் திட்டத்தில் எப்போதும் அஸ்வின் முக்கியமான இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.