நியூலாண்ட்ஸ்: இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட வீடியோவில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் நிட்டினி, முறை மாமன் படத்தில் மணிவண்ணன் பாடிய ”கபி கபி” பாடலை பாடியுள்ளது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் முடிவடைந்தது. முதல் போட்டி 3 நாட்களிலும், 2வது டெஸ்ட் போட்டி ஒன்றரை நாட்களிலும் நடைபெற்றது. சென்சுரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

ஆனால் கேப் டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணி தயார் செய்த பிட்ச், அந்த அணிக்கு பிரச்சனையாக மாறியது. சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் இணைந்து தென்னாப்பிரிக்கா அணியை மொத்தமாக வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். இருப்பினும் கேப் டவுன் பிட்ச் குறித்து தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர்கள் அமைதி காத்து வருகின்றனர்.
இதனிடையே இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் 2 போட்டிகளின் போது வீடியோவாக எடுத்து Vlogஆக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிட்ச் குறித்த மதிப்பீடு, இந்திய வீரர்களின் மனநிலை, கேப் டவுன் வெற்றி என்று பல்வேறு விஷயங்கள் பேசியுள்ளார். அதேபோல் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஷான் பொல்லாக்கும் பேசியிருக்கிறார்.
இதனிடையே கேப் டவுன் மைதானம் வந்த முன்னாள் வீரர் நிட்டினி, ரவிச்சந்திரன் அஸ்வினை பார்த்ததும் நேரடியாக பேச வந்தார். அப்போது வீடியோவில் சிஎஸ்கே ரசிகர்களுக்காக என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அஸ்வின் கேள்வி எழுப்பினார். அதற்கு நிட்டினி உடனடியாக, ”ஏய்.. கபி கபி.. மேரா தில் மே” என்று முறை மாமன் படத்தில் கவுண்டமணியிடம் மணிவண்ணன் பாடும் பாடலை பாடி அசத்தினார்.
தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மஹாயா நிட்டினி சிஎஸ்கே அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆல்பி மோர்க்கல், மஹாயா நிட்டினி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிஎஸ்கே அணியை விட்டு பிரிந்திருந்தாலும், நிட்டினி உடனடியாக பாடலை பாடியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.