மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கு முன்பே அந்த மைதானத்தின் வாசலில் சிஎஸ்கே ரசிகர்கள் குவிந்து இருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானம் மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமாக உள்ளது. அங்கு அந்த அணியின் ரசிகர்களே அதிக அளவில் கூடுவார்கள் என்ற பிம்பத்தை கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடைத்து வருகிறது.

சிஎஸ்கே அணி எந்த மைதானத்தில் ஆடினாலும் அங்கு மஞ்சள் நிற உடை மற்றும் சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற கொடியுடன் அதிக அளவில் சிஎஸ்கே ரசிகர்கள் வருகிறார்கள். மற்ற மைதானங்களை மிஞ்சும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் போட்டிக்கு முன்பே சேப்பாக்கத்தில் நடப்பது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நாளை ஆட இருக்கும் நிலையில் இன்று சிஎஸ்கே அணி பயிற்சி மேற்கொள்ள வான்கடே மைதானத்துக்கு தங்கள் மஞ்சள் நிற பேருந்தில் சென்றனர். அப்போது வான்கடே மைதான வாயிலில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்கள் சிஎஸ்கே அணியின் பேருந்தின் உள்ளே இருந்த வீரர்களை படம் எடுத்தும், அவர்களுக்கு கை அசைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த காட்சிகளை சிஎஸ்கே அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இது ஒரு வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களான அம்பானி குடும்பத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மும்பை வான்கடே மும்பை இந்தியன்ஸ் அணியின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.