மும்பை : அடுத்தடுத்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தனது பேட்டிங் மூலமாக ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிடுவார் என்று மும்பை அணியின் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, 2 வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்படும் "எல் கிளாக்கோ" போட்டியான மும்பை - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சீசனில் மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் 161 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார். இருப்பினும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான ரசிகர்களின் கோஷம் இன்னும் சிக்கலை கொடுத்து வருகிறது.
சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தும், ரசிகர்களின் எதிர்ப்பு குறைபாடில்லை. இதுகுறித்து இஷான் கிஷன் பேசுகையில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு சவால் என்றே மிகவும் பிடிக்கும். இதுபோன்ற சூழலில் ஏற்கனவே பாண்டியா இருந்துள்ளார். தற்போது மீண்டும் அதேபோன்ற சூழலை எதிர்கொண்டு வருகிறார்.
இதுபோன்ற விஷயங்களை ரசிகர்கள் நிறுத்த வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைப்பவர் அல்ல ஹர்திக் பாண்டியா. அவர் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் பேட்டிங் மூலமாக தனது திறமையையும், தலைமை பண்பையும் நிரூபிப்பார். அப்போது இதே ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவார்கள்.
இந்த சீசனில் எனது பேட்டிங் அணுகுமுறையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். கடந்த காலங்களில் பவுலர்கள் சிறப்பாக செயல்படும் போது, கொஞ்சம் கூட அச்சமின்றி அட்டாக் செய்ய முயல்வேன். ஆனால் இப்போது டி20 கிரிக்கெட்டிலும் கொஞ்சம் அவகாசம் எடுத்து கொள்ள முடியும் என்று புரிந்து கொண்டுள்ளேன். அதற்கான மன உறுதியும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.