மும்பை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அதிரடி வீரர் சிவம் துபே இடம்பெற விரும்புவதாக சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக உயர்ந்துள்ளார் சிவம் துபே. இந்த சீசனில் மட்டும் 5 இன்னிங்ஸ்களில் விளையாடிய சிவம் துபே 176 ரன்களை விளாசி இருக்கிறார். கடந்த சில சீசன்களாக ஸ்பின்னர்களை மட்டும் பொளந்து கட்டி வந்த சிவம் துபே, இந்த சீசனில் வேகப்பந்துவீச்சாளர்களையும் விளாசி வருகிறார். இதனால் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.

தற்போது மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே சொந்த மைதானத்தில் களமிறங்கவுள்ளார். ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணிக்காக லீக் போட்டிகளில் விளையாடிய சிவம் துபே, தனது அதிரடியான ஆட்டம் மூலமாக ரன்களை குவித்து அசத்தினார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மும்பை அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் பேசுகையில், சிவம் துபேவின் பவர் ஹிட்டிங் மிகவும் பிடித்திருக்கிறது. நான் கொஞ்சம் ஒரு சார்பாக பேசுவதாக சிலர் நினைக்கலாம். ஆனால் சிவம் துபேவை போல் பேட்டிங்கில் கொஞ்சம் கூடுதல் பவர் இருப்பவர்கள் எனது அணியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். தொடர்ச்சியாக பவர் ஹிட்டிங் செய்யும் இப்படியோரு வீரரை பார்த்ததே கிடையாது.
அதிலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிவம் துபே எப்படி இவ்வளவு பவர் கொண்டு வருகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. தற்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலம் கொண்டு ஷாட்களை விளையாட தொடங்கிவிட்டார். இதனால் தனித்துவம் மிக்க வீரராக சிவம் துபே என் பார்வையில் தெரிகிறார் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிவம் துபே இடம்பிடிப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் திட்டம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் ரோல் முடிவு செய்யப்பட வேண்டும். சிவம் துபேவையும் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.