மும்பை : மும்பை அணியின் தோல்வி கடைசி ஓவரில் உறுதியான போது வான்கடே மைதானம் முழுக்க சிஎஸ்கே பெயரை சொல்லி ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.
ஐபிஎல் தொடருக்கு முன் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில், சிஎஸ்கே அணி ஒரு கோப்பையை வென்றுவிட்டால், மும்பை அணி 2 கோப்பையை வெல்ல வேண்டும் என்று அந்த அணி நிர்வாகிகள் தீவிரமாக இருப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். எப்போதும் சிஎஸ்கே அணியிடம் தோல்வியடைவதை மும்பை அணி விரும்பியதே கிடையாது. இது களத்திலும் பல்வேறு சமயங்களில் வெளிப்பட்டுள்ளது.

தற்போது சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் 5 முறை கோப்பையை வென்று சமமாக உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியை எதிர்த்து மும்பை அணி வான்கடே மைதானத்தில் களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் மற்றும் சிவம் துபே இருவரும் அரைசதம் அடித்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ரோகித் சர்மாவை களத்தில் வைத்தே மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி மெகா சம்பவம் செய்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 34 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
அப்போது பதிரானா வீசிய முதல் பந்து டாட் பாலாக மாறியது. இதன்பின் சிஎஸ்கே அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது. இதனால் வான்கடே மைதானத்தில் குவிந்திருந்த சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே.. சிஎஸ்கே.. என்று கோஷம் எழுப்ப தொடங்கினார்கள். இதன்பின் ரோகித் சர்மா சதமடித்த போது, ரோகித் சர்மாவை பாராட்டிய ரசிகர்கள், மீண்டும் தோனி பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.
மும்பையின் கோட்டையாக கருதப்படும் வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே என்று எழுப்பப்பட்ட கோஷம் விண்ணை பிளந்தது. இது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் மீதான கோபத்தை கடந்து, சிஎஸ்கே மற்றும் தோனி மீதான அன்பே காரணம் என்று பார்க்கப்படுகிறது. வான்கடே மைதானத்தில் கடைசி முறையாக ஆடிய தோனிக்கு, மும்பை ரசிகர்கள் சிறப்பாக பிரியாவிடை அளித்துள்ளனர்.