மும்பை : மும்பை அணியின் பிளேயிங் லெவனில் செய்யப்பட்ட குழப்பமே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைய காரணமாக அமைந்துள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இந்த தோல்வி காரணமாக புள்ளிப்பட்டியலிலும் மும்பை அணி சரிவை சந்தித்துள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

கடந்த 3 சீசன்களாக மும்பை அணி கோப்பையை வெல்ல முடியாமல் திணறிய நிலையில், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கொண்டு வரப்பட்டார். அவர் வந்த பின் மும்பை அணி பல்வேறு வெற்றிகளை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அடுத்தடுத்து சொந்த மைதானத்திலேயே தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதற்கு மும்பை அணி சரியாக பிளேயிங் லெவனை கட்டமைக்க முடியாமல் இருப்பதாக முக்கிய காரணம். குறிப்பாக பவுலிங் அட்டாக்கில் பும்ராவை தவிர்த்து வேறு எந்த நல்ல பவுலரையும் மும்பை அணி பிளேயிங் லெவனில் சேர்க்காமல் உள்ளது. மும்பை அணியின் பவுலர்கள் என்று பார்த்தால் பும்ரா, கோட்ஸி, முகமது நபி, ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோர் இருக்கின்றனர்.
இவர்களை தவிர்த்து ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரால் 2 ஓவர்கள் வரை பங்களிக்க முடியும். இதில் ஸ்ரேயாஸ் கோபால் மீதான நம்பிக்கையின்மையால் அவரை பயன்படுத்துவதில் ஹர்திக் பாண்டியாவிற்கு சிக்கல் உள்ளது. அதேபோல் முதல் 3 போட்டிகளில் பும்ரா, கோட்ஸி மற்றும் லூக் வுட் அல்லது மபாகா ஆகியோரை கொண்டு மும்பை அணி களமிறங்கியது.
இதில் மபாகாவை நீக்கிய ஹர்திக் பாண்டியா முகமது நபியை கொண்டு வந்தார். அதேபோல் ஆகாஷ் மத்வாலை கொண்டு வந்த ஹர்திக் பாண்டியா, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனான ரொமாரியோ ஷெப்பர்டையும் சேர்த்தார். இந்த பவுலிங் அட்டாக்கில் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் அனைவரின் எகனாமியும் 10 ரன்களுக்கு மேலாகவே உள்ளது. இதனை சரி செய்யவில்லை என்றால் மும்பை அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்திக்கும் என்று கணிக்கப்படுகிறது.