மும்பை : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே-வுக்கு பயந்து நன்றாக பவுலிங் செய்த ஸ்ரேயாஸ் கோபாலை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அட்டாகில் இருந்து வெளியேற்றினார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 176 ரன்களை விளாசி இருக்கிறார். ஒவ்வொரு முறை சிவம் துபே களமிறங்கும் போது எதிரணிகள் ஸ்பின்னர்களை அட்டாக்கில் இருந்து வெளியேற்றி வந்தனர். ஏனென்றால் ஸ்பின்னர்கள் கொஞ்சம் லைனை தவறவிட்டாலும், பந்து நிச்சயம் சிக்ஸ் கடந்து சென்றுவிடும்.

இந்த சீசனில் மட்டும் சிவம் துபே 13 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் செய்வதாக அறிவித்ததால், சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் ரஹானே 5 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சிஎஸ்கே அணி 8 ஓவர்கள் முடிவில் 61 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது. ரன் ரேட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால், உடனடியாக சிஎஸ்கே அணியின் சிவம் துபே களமிறக்கப்பட்டார். இதனால் சிவம் துபேவின் விக்கெட்டை வீழ்த்த நட்சத்திர வீரர் பும்ராவை அட்டாக்கில் கொண்டு வந்தார் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவருக்கு பின் ஸ்ரேயாஸ் கோபால் அட்டாக்கில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை ஸ்ரேயாஸ் கோபால் வீழ்த்தி இருந்தார். ஆனால் 2 போட்டிகளாக பவுலிங் செய்யாமல் தவிர்த்து வந்த ஹர்திக் பாண்டியா, அடுத்த ஓவரை வீச வந்தார். இதன் மூலம் சிவம் துபேவுக்கு ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்ய அச்சமடைந்தது புரிய வந்தது. ஆனாலும் அசையாத சிவம் துபே, ஹர்திக் பாண்டியா பவுலிங்கிலும் 3 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
அதுமட்டுமல்லாமல் சிவம் துபே களத்தில் இருந்ததால் உடனடியாக ரொமாரியோ ஷெப்பர்ட், கோட்ஸி உள்ளிட்டோரை மும்பை அணி அடுத்தடுத்து அட்டாக்கில் கொண்டு வந்தது. சிவம் துபே களத்தில் இருந்ததால் மும்பை அணி தங்களின் பவுலிங் திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.