மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்காதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி தரப்பில் நட்சத்திர ஸ்பின்னர் தீக்சனா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் பதிரானா களமிறக்கப்பட்டார்.

இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் அஜிங்கியா ரஹானே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். வழக்கமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்குவார். ஆனால் மும்பை அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தொடக்க வீரரை மாற்றி சிஎஸ்கே அணி நிர்வாகம் களமிறக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு அஜிங்கியா ரஹானேவின் சொந்த மைதானம் என்பது முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் கடந்த சீசனில் அஜிங்கியா ரஹானே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இதனால் ரஹானேவுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், மும்பை அணிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையிலும் திட்டமிட்டு சிஎஸ்கே அணி ரஹானேவை களமிறக்கியது.
ஆனால் அஜிங்கியா ரஹானே 8 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக தொடக்கம் கொடுத்த ரஹானே சொதப்பலான விளையாடி ஆட்டமிழந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியின் சர்ப்ரைஸ் திட்டத்தை மும்பை அணி எளிதாக முறியடித்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கூடுதல் பீதியை கொடுத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் முதல் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 220 ரன்கள் எடுத்தால் தான், பவுலிங் செய்யும் போது ஓரளவிற்கு சவால் கொடுக்க முடியும். ஏனென்றால் 10 ஓவர்களுக்கு பின் பனிப்பொழிவு தொடங்கிவிடும். இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.