மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளே ஓவர்களில் பவுலிங் செய்த போது பதற்றமாக இருந்ததாக சிஎஸ்கே அணியின் பதிரானா தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெறுவதற்கு இளம் வேகப்பந்துவீச்சாளரான பதிரானா முக்கிய காரணமாக அமைந்தார். சிறப்பாக பவுலிங் செய்த பதிரானா, 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 12 டாட் பால்கள் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

காயத்தில் இருந்து நேரடியாக இந்த போட்டியில் களமிறங்கிய பதிரானா, இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக சிஎஸ்கே அணிக்காக ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பதிரானா பேசுகையில், நாங்கள் பவர் பிளே ஓவர்களில் பவுலிங் செய்த போது, என்னுள் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனால் நிதானமாக இருக்குமாறு என்னிடம் கூறினார்கள். உனது பணியை மட்டும் செய் என்று சிஎஸ்கே தரப்பில் சொல்லப்பட்டது. அது என் மனதிற்குள் நம்பிக்கையை அதிகரித்தது என்றே சொல்ல வேண்டும்.
வழக்கமாக என் பவுலிங்கில் எவ்வளவு ரன்கள் எடுக்கப்படுகிறது என்பதை பற்றி கவலை கொள்ள மாட்டேன். எப்போதும் சிறப்பாக பந்தை வீசுகிறேனா என்பதில் மட்டுமே கவனமாக இருப்பேன். ஏனென்றால் பந்துகளை சரியாக வீசினால், எனது பவுலிங்கில் பலன் கிடைக்கும். சில நேரங்களில் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவாறு எனது திட்டங்களை மாற்றி கொள்வேன்.
2 வாரங்களுக்கு முன்பாக கால்களில் கொஞ்சம் பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்தனர். அதுதான் எனது பவுலிங் ஃபார்முக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பதிரானாவை ”எங்களின் மலிங்கா” என்று குறிப்பிட்டு வருகிறார். தற்போது மலிங்கா பயிற்சி அளித்து வரும் அணிக்கு எதிராகவே பதிரானா சம்பவம் செய்துள்ளார்.