மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தோனி, 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 20 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் மும்பை - சிஎஸ்கே அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய அதிரடி வீரர் சிவம் துபே 38 பந்துகளில் 2 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 66 ரன்களை விளாசினார்.

அதேபோல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 5 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 69 ரன்களை விளாசினார். ஆனால் கடைசி நேரத்தில் வந்த தோனி மொத்த ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார். 19 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரை வீச இளம் பவுலரான ஆகாஷ் மத்வால் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆகாஷ் மத்வால் பவுலிங்கை ஏற்கனவே சிவம் துபே பொளந்து கட்டியதால், அவரை நம்பாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியாவே பவுலிங் செய்ய வந்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே மிட்சல் பவுண்டரி அடிக்க, 2வது பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று மிட்சல் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனி களம் புகுந்தார். வான்கடே மைதானத்தில் தோனி விளையாடும் கடைசி போட்டி என்பதால் ரசிகர்களின் கோஷம் விண்ணை பிளந்தது.
ஹர்திக் பாண்டியா வீசிய 3வது பந்தில் லாங் ஆஃப் திசையில் தோனி சிக்சர் அடிக்க, 4வது பந்திலும் ஒய்டு லாங் ஆன் திசையில் சிக்சரை விளாசி தள்ளினார். தொடர்ந்து 5வது பந்து டாஸாக விழ, எளிதாக டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் அடித்து தோனி அசத்தினார். கடைசி பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட, தோனி 4 பந்தில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 20 ரன்களை சேர்த்து அசத்தினார்.
தோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த பின் வான்கடே மைதானமே ஒரு சில நிமிடங்கள் சிஎஸ்கேவின் கோட்டையாக மாறியது. மும்பை அணியின் கேப்டனையே நேரடியாக தோனி இப்படி அட்டாக் செய்வார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.