மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள 2024 ஐபிஎல் தொடரின் லீக் போட்டியே மும்பை வான்கடே மைதானத்தில் தோனியின் கடைசி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போதிருந்தே அவர் ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், 2020 ஐபிஎல் முதல் 2024 ஐபிஎல் வரை ஐந்து ஆண்டுகள் அவர் ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். தற்போது 42 வயதாகும் நிலையில் அவரால் இனியும் ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோனிக்கு காலில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வலியுடனே அவர் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் அவர் 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் பேட்டிங் செய்து முடித்த உடன் அவரது கால்களில் வீக்கம் ஏற்பட்டது.
இது ஒருபுறம் இருக்க தன்னால் இனியும் தொடர்ந்து ஆட முடியாது என்ற நிலையில் சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமித்து ஒரு வீரராக மட்டுமே சிஎஸ்கே அணிக்காக ஆடி வருகிறார் தோனி. இதன் மூலம் 2024 ஐபிஎல் தொடருடன் தோனி கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெறுவார் என உறுதியாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் அவரின் கடைசி போட்டியாக அமைய உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி என எதுவும் வான்கடே மைதானத்தில் நடைபெறாது என்பதால் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியே சிஎஸ்கே அணி இந்த மைதானத்தில் ஆடும் கடைசி போட்டியாக அமைய உள்ளது.
இந்த மைதானத்தில் தான் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரை கேப்டனாக வென்றார் தோனி. இதே மைதானத்தில் தான் சிக்ஸ் அடித்து 2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார் தோனி. அதனால் மும்பை வான்கடே மைதானத்திற்கும், தோனிக்கும் உணர்வுப்பூர்வமான பந்தம் உள்ளது. இந்த நிலையில், 2011 உலகக்கோப்பை வென்ற மும்பை வான்கடே மைதானத்தில் தோனி தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் ஆட இருக்கிறார்.
இது தோனி மும்பையை சேர்ந்த ரசிகர்களுக்கும் நெகிழ வைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. அவர்கள் அனைவரும் தோனி இந்த மைதானத்தில் கடைசியாக ஒரு முறை பேட்டிங் செய்ய வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.