மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீசிய போது வைடு தராத நிலையில், நான்காவது அம்பயரை சுற்றி வளைத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் மார்க் பவுச்சர் மற்றும் கீரான் பொல்லார்ட் சத்தம் போட்டு அழுத்தம் கொடுத்தனர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. என்ன நடந்தது?
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய 29வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த இரு அணிகளும் ஐந்து முறை கோப்பை வென்ற அணிகள் என்பதால் போட்டிக்கு முன் இரு அணிகளும் பெரும் அழுத்தத்தில் இருந்தன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 206 ரன்கள் குவித்தது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்தது. 7 ஓவர்களில் 70 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை நோக்கி செல்வதாகவே அனைவரும் கருதினர். எட்டாவது ஓவரில் பதிரானா 2 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் சரிவை சந்தித்து கடும் அழுத்தத்தில் இருந்தது மும்பை அணி.
14வது ஓவரில் 3 விக்கெட்கள் இழந்த நிலையில் ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்தார். அப்போது 6 ஓவர்களில் 77 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது ஷர்துல் தாக்குர் வீசிய 15வது ஓவரில் ஒரு பந்து வைடாக சென்றது. ஆனால், ஹர்திக் பாண்டியா நகர்ந்து சென்று பந்தை அடிக்க முயன்றார். அப்போது பேட், பந்துக்கு அருகே இருந்தது. இந்த நிலையில் அம்பயர் அதற்கு வைடு தரவில்லை. ஆனால், ஹர்திக் பாண்டியா ரிவ்யூ கேட்டார். அப்போது ரீப்ளேவில் பாண்டியா நகர்ந்து சென்றதும், அவரது பேட், பந்துக்கு மிக அருகே இருந்ததும் தெரிந்ததால் மூன்றாவது அம்பயர் வைடு தர மறுத்தார்.
அப்போது வெளியே அமர்ந்து இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட் கடும் கோபமடைந்தார். அவர் அங்கே இருந்த நான்காவது அம்பயரிடம் வைடு தராதது குறித்து வாக்குவாதம் செய்தார். அப்போது அம்பயரை சுற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் மற்றும் பிற பயிற்சியாளர் குழுவினர் நின்று கொண்டு அழுத்தம் தந்தனர்.
பின்னர் திடீரென டைம் அவுட் கேட்டு களத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் பேச முயன்றார் பயிற்சியாளர் மார்க் பவுச்சர். ஆனால், டைம் அவுட் கேட்பதற்கான நேரம் முடிந்து விட்டது என அவர்களை நான்காவது அம்பயர் தடுத்தார். ஆனால், அதை கேட்காமல் அவர்கள் பவுண்டரியை தாண்டி சில அடி தூரம் சென்றனர். பின்னர் நான்காவது அம்பயர் கோபம் கொண்டு விதியை சுட்டிக் காட்டி கோபமாக பேசிய பின்னரே உள்ளே வந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியினர் அம்பயரை மிரட்டிய காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதனால், அம்பயர் விவகாரம் பெரிதாக வெடிக்கவில்லை.