மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் "எல் கிளாசிக்கோ" என்று கொண்டாடப்படும் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை நடக்கவுள்ளது. வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியை காண ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் தலா 5 கோப்பைகளுடன் இருக்கும் நிலையில், மும்பை அணி 6வது கோப்பையை வெல்ல பல்வேறு மாற்றங்களுடன் வந்துள்ளது.

மும்பை அணியை ரியல் எதிரியாக சிஎஸ்கே அணி இருந்து வரும் நிலையில், இந்த போட்டியில் வென்று பகை தீர்க்க பல்தான்ஸ் தீவிரமாக உள்ளனர். மும்பை அணி 3 தோல்விகளுடன் சீசனை தொடங்கினாலும், அடுத்தடுத்து 2 போட்டிகளை சொந்த மண்ணில் வென்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. மறுபக்கம் சிஎஸ்கே அணி வெளி மைதானங்களில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தீபக் சஹர் மற்றும் பதிரானா ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர். இதனால் சிஎஸ்கே அணியின் பவுலிங் பலவீனமடைந்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு போதுமான ஓய்வு கிடைத்துள்ளதால், இருவருமே காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதாக தகவல் வெளி வந்துள்ளது.
இதனால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை வான்கடே மைதானத்தில் சிறு வயது முதலே விளையாடிய ரஹானே, ஷர்துல் தாக்கூர், சிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் இருப்பதால், சிஎஸ்கே அணி நிச்சயம் சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் வான்கடே மைதானத்தில் அதிரடி ஹிட்டர்கள் அவசியம் என்பதால் சிவம் துபேவுடன் இளம் வீரர் சமீர் ரிஸ்வி களமிறங்க வாய்ப்புக உள்ளது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின், ரஹானே, சிவம் துபே, மிட்சல், சமீர் ரிஸ்வி, ஜடேஜா, தோனி, தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, பதிரானா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.