மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பதவியை இழந்த ரோஹித் சர்மா 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறி இருக்கிறார்.
மேலும், இந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தாலும் அவர் ரோஹித் சர்மா வரும் வரை தான் கேப்டனாக இருப்பார். அவர் தற்காலிக கேப்டன் தான் என தனது கணிப்பை கூறி இருக்கிறார். இதே போன்ற கருத்துக்களை பலரும் கூறி இருந்தாலும் தற்போது ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்களில் ஒருவராக இருக்கும் மைக்கேல் வாகன் இந்த கருத்தை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி மாற்றமாக கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தால் ரோஹித் சர்மா கடும் அதிருப்தி அடைந்தார். அதை அவர் வெளிப்படையாக கூறாவிட்டாலும் அவரது மனைவி ரித்திகா சஜ்தே சில பதிவுகள் மூலம் அதை வெளிப்படுத்தி இருந்தார்.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அளித்த பேட்டி ஒன்றில் ரோஹித் சர்மா தன் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் அவரை கேப்டன் பணிச் சுமையை குறைத்து இருப்பதாக அவர் கூறி இருந்தார். அதில் பல விஷயங்கள் தவறாக இருப்பதாக ரித்திகா கூறி இருந்தார். அதனால், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருப்பது வெட்ட வெளிச்சமானது.
மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தனது கடைசி ஐபிஎல் தொடரில் ஆடி வரும் நிலையில் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் வசம் அளித்து இருக்கிறார். இனி அவர் தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். எனவே, மைக்கேல் வாகன் கூறுவது போல ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்கு வருவதும், கேப்டனாக ஆவதும் பெரும் கேள்விக்குறி தான்.