மும்பை : சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
எல்-கிளாசிக்கோ என்று சொல்லப்படும் மும்பை - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடக்கவுள்ளது. முதல்முறையாக இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் விளையாடுவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் உள்ளது.

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் பேசுகையில், தோனிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்-க்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. தோனி மிகவும் கூலான ஒரு கேப்டன். இப்போது ருதுராஜ் கெய்க்வாட்-ம் அப்படியே தான் இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியை வெற்றி, தோல்விகளை வைத்து நாங்கள் அளவிடவில்லை.
சிஎஸ்கே அணியிலும், வீரர்கள் மத்தியிலும் அவரின் ஆளுமையை வைத்தே மதிப்பிடுகிறோம். அது நல்ல உச்சத்தில் உள்ளது. தோனியை போன்று நீண்ட ஆண்டுகளுக்கான கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்று நம்புகிறோம். அதேபோல் கேப்டன்சி காரணமாக அவர் பேட்டிங் ஸ்லோவாகிவிட்டது என்று சொல்ல முடியாது. ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது.
அதேபோல் தோனியின் நட்சத்திர அந்தஸ்து காரணமாக வெளி மாநிலங்களில் நடக்கும் போட்டிகளிலும் அதிகளவிலான ஆதரவு கிடைக்கிறது. ஒவ்வொரு முறை மஞ்சள் படை சூழ மைதானத்தில் களமிறங்குவது வீரர்களுக்கும் பெருமையாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி வீரர்களின் பேட்டிங் திறமை அதிகரித்துள்ளது.
வான்கடே மைதானத்தில் ஆஃப் ஸ்பின்னராக விளையாடுவது மிகவும் கடினம். அதற்கேற்ப பேட்டிங் மற்றும் பவுலிங் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு எது சாதகமாக அமைந்துள்ளது என்று பார்க்கிறோம். அதேபோல் அணியின் காம்பினேஷனிலும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்