மும்பை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்த மும்பை ரொமாரியோ ஷெப்பர்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக மும்பை அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பொல்லார்ட். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், பேட்டிங் பயிற்சியாளர் என்ற புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இருப்பினும் பொல்லார்ட் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப முடியாமல் மும்பை அணியே திண்டாடியது.

அவரது இடத்தை நிரப்ப டிம் டேவிட்டை கொண்டு வந்தும் மும்பை அணி எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏனென்றால் கால் முட்டிக்கு கீழ் பந்தை வீசினால் டிம் டேவிட் திணறியது அப்பட்டமாக தெரிந்தது. அதனால் ஸ்பின்னர்கள் பவுலிங் செய்து கொண்டிருந்தாலே டிம் டேவிட்டை களமிறக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணி தவிர்த்து வந்தது. இதனால் பொல்லார்ட்-க்கான மாற்று வீரரை தேட வேண்டும் என்று மும்பை ரசிகர்கள் விவாதித்து வந்தனர்.
இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 39 ரன்களை விளாசி இருக்கிறார். நார்கியே வீசிய கடைசி ஓவரில் மட்டும் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 சிக்ஸ், 2 பவுண்டரியை விளாசி 32 ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலமாக மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்களை சேர்த்தது.
இந்த இன்னிங்ஸின் மூலமாக ரொமாரியோ ஷெப்பர்ட், மும்பை வீரரால் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். லக்னோ அணியில் இருந்த ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் அணி ட்ரேட் முறையில் ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே சிபிஎல் தொடரில் கயானா அணி வெற்றிபெற முக்கிய காரணமாக ரொமாரியோ ஷெப்பர்ட் அமைந்தார்.
பொல்லார்ட் பரிந்துரையின் பேரிலேயே இந்த ட்ரேட் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஒரே போட்டியில் ரொமாரியோ ஷெப்பர்ட் தனது திறமையை மும்பை அணிக்கும், ரசிகர்களுக்கும் நிரூபித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரொமாரியோ ஷெப்பர்ட் மூலமாக மும்பை அணி அடுத்த பொல்லார்டை கண்டறிந்துள்ளது. இதனால் இனி டிம் டேவிட்டை நம்பி மும்பை அணி ஃபினிஷிங்கில் இருக்க தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.