மும்பை : மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அபாரமாக அடித்த பந்தை ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அக்சர் படேல் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மும்பை அணி தரப்பில் இஷான் கிஷன் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டெல்லி அணி சார்பாக கலீல் அஹ்மத் முதல் ஓவரை வீசினார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதால் ரோகித் சர்மா அடக்கி வாசிக்க, மறுமுனையில் இஷான் கிஷன் பவுண்டரிகளாக விளாசி பொளந்து கட்டினார். ஆனால் ஸ்பின்னர்கள் வந்தபின் ஆட்டத்தை கட்டுப்பாட்டை ரோகித் சர்மா எடுத்து கொண்டார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. பவர் பிளே ஓவர்களின் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை சேர்த்தது.
இதனால் டெல்லி அணி விக்கெட் வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனால் மீண்டும் அக்சர் படேல் அட்டாக்கில் கொண்டு வரப்பட, ரோகித் சர்மாவை செட் செய்து 49 ரன்களில் அக்சர் படேல் வீழ்த்தி அசத்தினார். இதன் பின் அக்சர் படேல் ஒரே ஸ்பெல்லில் 4 ஓவர்களையும் வீசினார். 3 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரை வீச அக்சர் படேல் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே இஷான் கிஷன் அதிரடியாக சிக்ஸ் அடித்து அட்டாக் செய்தார். இதனால் இஷான் கிஷன் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்சர் படேல் 2வது பந்தை வீசினார். அந்த பந்தை இஷான் கிஷன் நேராக முழு பலத்துடன் அடிக்க, அதனை கண் இமைக்கும் நேரத்தில் ஒற்றை கையால் அக்சர் படேல் கேட்ச் பிடித்து மிரள வைத்தார். ஒரு நிமிடம் வான்கடே மைதானம் அமைதியானது.
இதனால் இஷான் கிஷன் 23 பந்துகளில் 2 சிக்ஸ், 4 ஃபோர்ஸ் உட்பட 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்த அவர், 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலிங்கை முடித்தார். அக்சர் படேலின் பவுலிங்கால் மும்பை அணியின் ரன் குவிப்பை டெல்லி அணி கட்டுக்குள் கொண்டு வந்தது.