மும்பை : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மைதானத்தில் இருந்த 20,000 இளம் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் மைதானத்தை சுற்றி வந்து அவர்களுக்கு நன்றி கூறினர்.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கடந்த 14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் போது ஏதாவது ஒரு மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு ஆயிரக்கணக்கான பள்ளி சிறுவர், சிறுமிகளை அழைத்து வந்து போட்டியை நேரில் காண ஏற்பாடு செய்து வருகின்றனர். "அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு" என்ற பெயரில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அந்தப் போட்டியைக் காண சுமார் 20,000 பள்ளிக் குழந்தைகள் மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீதா அம்பானி சார்பில் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உடையணிந்து அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. 2024 ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்து இருந்த நிலையில், நான்காவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியதால் அந்த அணி மகிழ்ச்சியில் திளைத்தது.
பின்னர் தங்களை ஆதரித்த 20,000 சிறுவர், சிறுமியரை உற்சாகப்படுத்தும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து அவர்களுக்கு நன்றி கூறினர். இந்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது.