மும்பை : டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா, பும்ராவின் குறிப்பிட்ட பந்துவீச்சில் தன் கால்களில் காயம் ஏற்படலாம் என அஞ்சி ஒரு காலை தூக்கிக் கொண்டு ஆடி தன் விக்கெட்டை இழந்தார்.
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு
234 ரன்கள் குவித்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணி 235 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்தியது. அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னர் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான ப்ரித்வி ஷா நிதானமாக ரன் சேர்க்கத் துவங்கி, பின்னர் வேகம் எடுத்தார்.
மும்பை அணியின் பந்துவீச்சாளர்களிலேயே பும்ராவின் ஓவர்களில் ரன் குவிக்க டெல்லி வீரர்கள் திணறினர். ப்ரித்வி ஷாவும் பும்ரா ஓவர்களில் மிக கவனமாக ஆடினார். அப்போது 12வது ஓவரை பும்ரா வீசினார். அதுவரை டெல்லி அணியின் வார்னர் விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தது மும்பை அணி. உடனடியாக ஒரு விக்கெட் வேண்டும் என்ற நிலையில் பும்ரா யார்க்கர் பந்துகளை வீசினார்.
12வது ஓவரின் ஐந்தாவது பந்தை துல்லியமான யார்க்கராக வீசினார் பும்ரா. அது சரியாக ப்ரித்வி ஷாவின் கால் விரல்களை நோக்கி வந்தது. இதற்கு முன்பு இது போல பும்ரா பல பேட்ஸ்மேன்களின் கால் விரல்களை பதம் பார்த்து இருக்கிறார். சில சமயம் அந்த வீரர்களால் அடுத்த போட்டிகளில் ஆட முடியாமல் கூட போய்விடும்.
இந்த நிலையில் ப்ரித்வி ஷா, தனது கால் விரல்களை குறி பார்த்து வந்த யார்க்கரில் இருந்து தப்பிக்க வேண்டி தனது வலது காலை தூக்கி விட்டு அந்த பந்தை தடுக்க முயன்றார். ஆனால், அவர் பேட்டை திருப்பும் முன் பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. ப்ரித்வி ஷா 40 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் விக்கெட்களை இழந்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணியின் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து போராட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் பும்ரா.