அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் இசான் கிஷன் எதிர்கொண்ட நான்காவது பந்திலே டக் அவுட்டாகி வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
ரிஷப் பண்டிற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பராக இசான் கிஷன் உருவெடுத்தார். ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இசான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனையும் அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என இந்திய அணியில் இசான் கிஷன் முக்கிய இடத்தை பிடித்தார். எனினும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் இசான் கிஷனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இசான் கிஷனுக்கு ஈகோ பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் களம் இறங்கி இசான் கிஷன் அதன் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அணியில் இருந்து விலகினார்.
தமக்கு மனசோர்வு ஏற்பட்டதாக கூறி இசான் கிஷன் இந்த முடிவை எடுத்தார். ஆனால் இசான் கிசன் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சுற்றுலா செல்வது,நண்பர்களுடன் பார்ட்டி செய்வது என்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் ரஞ்சி கிரிக்கெட்டில் நடைபெற்ற போது அதில் பங்கேற்காமல் தான் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்கிறேன் என பிசிசிஐக்கு தண்ணீர் காட்டினார்.
இதனால் கடுப்பான பிசிசிஐ அவருக்கு வழங்கிய ஊதிய ஒப்பந்தத்தை ரத்து செய்தது. எனினும் அதன் பிறகும் கூட அவர் ரஞ்சிப் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் சுமார் நான்கு மாதத்திற்கு பிறகு பெரிய கிரிக்கெட் தொடரில் இசான் கிஷன் பங்கேற்றார். இதில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இசான் கிஷன் களமிறங்கினார். நான்கு மாதம் ஓய்வுக்கு பிறகு வந்திருப்பதால் இஷான் கிஷன் சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர் எதிர் கொள்ள முடியாமல் இசான் கிஷன் கவனக்குறைவால் விக்கெட் கீப்பர் சாகாவிடம் கேட்ச் ஆனார். இதனால் இதற்குத்தான் நீங்கள் ஓய்வு எடுத்தீர்களா என்று ரசிகர்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.