மும்பை : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்ததற்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவுகளே காரணமாக அமைந்துள்ளது.
வான்கடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் மும்பை அணியை வீழ்த்தி கேகேஆர் அணி சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியின் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 19.5 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி வெறும் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணி என்ற மோசமான சாதனையையும் மும்பை அணி படைத்துள்ளது. மும்பை அணியின் இந்த தோல்விக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா எடுத்த சில தவறான முடிவுகளே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் கேகேஆர் அணியின் பேட்டிங்கின் போது, 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது திடீரென இன்பேக்ட் பிளேயராக வந்த மணிஷ் பாண்டே, வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். இவர்கள் இருவரும் இணைந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மணிஷ் பாண்டே களம் புகுந்ததும் அவரின் விக்கெட்டை வீழ்த்த முயற்சிக்காமல் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டரான நமன் திர்ரை பவுலிங் செய்ய அழைத்தார்.
அவர் தொடர்ச்சியாக வீசிய 3 ஓவர்களில் 25 ரன்கள் சேர்க்கப்பட்டது. அந்த நேரத்தில் மீண்டும் பும்ராவை வைத்து அட்டாக் செய்திருந்தால், நிச்சயம் விக்கெட் கிடைத்திருக்கும். அல்லது கேகேஆர் அணியின் ரன் ரேட் குறைந்திருக்கும். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் டிஃபென்சிவ் மனநிலையால் கேகேஆர் அணி நல்ல ஸ்கோரை எட்ட காரணமாக அமைந்தது.
அதேபோல் மும்பை அணியின் பேட்டிங்கின் போது பவர் பிளேவிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது உடனடியாக பேட்டிங் செய்ய களமிறங்காமல் திலக் வர்மா, நேஹல் வதேரா உள்ளிட்டோரை ஹர்திக் பாண்டியா அனுப்பி வைத்தார். அவர்களின் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் காரணமாகவே மும்பை அணி தோல்வியை சந்தித்ததாக பார்க்கப்படுகிறது.