மும்பை : ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியே மும்பை அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று சீனியர் வீரர்கள் பலரும் பயிற்சியாளர்களிடம் கருத்து தெரிவித்தது தெரிய வந்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் மும்பை அணிக்கு மீண்டும் ஒரு மோசமான சீசனாக அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் களமிறங்கிய மும்பை அணி, 12 போட்டிகளில் விளையாடி 8 தோல்வி, 4 வெற்றி உட்பட 8 புள்ளிகளுடன் உள்ளது. இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

நட்சத்திர வீரர்கள் ஏராளமானோர் இருந்த போதும், மும்பை அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பை அணியின் சீனியர் வீரர்கள் பலரும் பயிற்சியாளர்களிடம் தோல்விக்கான காரணம் குறித்து தங்களின் கருத்தை கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் மும்பை அணியின் ரோகித் சர்மா, பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் மும்பை அணியின் நிர்வாகிகள் இணைந்து இரவு உணவுக்கு சென்றுள்ளனர். அப்போது வீரர்கள் தரப்பில் மும்பை அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து சில கருத்துகளை சீனியர் வீரர்கள் பலரும் பகிர்ந்துள்ளனர்.
அதில், ஓய்வறையில் வெற்றி பெற வேண்டும் என்ற எனர்ஜி இல்லை. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி ஸ்டைலே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் தோல்வியின் போது ஒரு வீரரின் மேல் பழியை போவதும் மும்பை வீரர்களால் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றும் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை அணி நிர்வாகிகள் பேசுகையில், மும்பை அணி 10 ஆண்டுகளாக ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வந்துள்ளது. அதனால் வழக்கமாக தலைமை மாற்றத்தின் போது வரும் சவால் தான் மும்பை அணிக்கும் வந்துள்ளது. இது கிரிக்கெட் மட்டுமல்ல.. அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை என்று தெரிவித்துள்ளனர்.