மும்பை : மும்பை அணியின் வீரர்களிடையே கொஞ்சம் கூட ஒற்றுமையே இல்லை என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 170 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட போதும், வெறும் 145 ரன்கள் மட்டுமே சேர்த்து மும்பை அணி தோல்வியை சந்தித்தது. வான்கடே மைதானத்தில் 170 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் மும்பை அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

வான்கடே மைதானத்தில் 2வது பேட்டிங் செய்யும் அணியால் 240 ரன்கள் இலக்கு என்றாலும் எளிதாக சேஸ் செய்ய முடியும். சிறிய மைதானம், பனிப்பொழிவு ஆகியவை இருக்கும் போது, பலம் வாய்ந்த பேட்டிங் லைன் அப்பை கொண்டு மும்பை அணி தோல்வியடைந்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஒன் பேமிலியான மும்பை அணிக்குள் பிளவு வந்துள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசுகையில், வான்கடே மைதானம் அளவில் மிகவும் சிறியது. அதேபோல் பனிப்பொழிவும் இருக்கும் போது, பந்து பேட்டிற்கு நன்றாக வரும். அதேபோல் பிட்ச் எப்போதும் பிளாட்டாக இருக்காது. நேற்றைய ஆட்டத்தில் கொஞ்சம் உலர்வாக இருந்தது.
இதனால் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. ஆனால் அபரிதமான பவுன்ஸ் ஒன்றும் இல்லை. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியை வெல்ல சூர்யகுமார் யாதவால் மட்டுமே முடிந்திருக்கும். ஆனால் அவரும் புல் டாஸ் பந்தில் ஷாட் விளையாட முயன்று ஆட்டமிழந்தார். அதேபோல் டிம் டேவிட்டும் புல் டாஸ் பந்தில் மிட்சல் ஸ்டார்க்கிடம் வீழ்ந்துவிட்டார்.
மும்பை அணியினர் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக விளையாடுவது போல் தோன்றவில்லை என்று விமர்சித்துள்ளார். ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்ததில் இருந்து மும்பை அணியின் வீரர்களான பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்டோர் பெரியளவில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.