லக்னோ : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் நடப்பு சீசனில் ஏழாவது தோல்வியை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவர் பிளேவில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது அணிக்கு பெரிய இழப்பாக அமைந்ததாக தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர் பவர் பிளேவில் விக்கெட்டுகள் விழுந்தவுடன் அதிலிருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. பவர் பிளேவில் தான் நாங்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் எங்களால் அது முடியாமல் போய்விட்டது. மற்ற அணிகள் அதிரடியாக ஆடுவதால் எங்களுக்கும் நெருக்கடி ஏற்படுகிறதா என்று கேட்கிறீர்கள்.
ஆனால் அப்படி கிடையாது. எங்களை பொறுத்தவரை பந்தை பார்த்தால் அதனை அடிக்க வேண்டும். ஆடுகளும் நன்றாக தான் இருந்தது. நாங்கள் பெரிய ஷார்ட் ஆடும் வகையில்தான் அனைத்துமே அமைந்தது. ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் தவறவிட்டோம். இந்த சீசன் முழுவதுமே பேட்டிங்கில் இப்படித்தான் மோசமாக அமைந்திருக்கிறது.
நாம் ஆடுகளத்தில் காலடி வைக்கும் போது சில சமயம் நாம் தோல்வியை தழுவோம். சில சமயம் நமக்கு வெற்றி கிடைக்கும். ஆனால் எப்போதுமே களத்தில் நாம் போராட வேண்டும். சண்டை செய்ய வேண்டும். இதை தான் நான் எப்போதுமே நம்புகின்றேன். இந்த போட்டி எங்களுக்கு பாதகங்களை கொடுத்தாலும் இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
வதேரா சிறப்பாக இன்றைய ஆட்டத்தில் விளையாடினார். கடந்த ஆண்டும் எங்கள் அணிக்காக அவர் நன்றாக விளையாடினார். இந்த ஆண்டு டீம் காம்பினேஷன் தான் எங்களால் வதேராவை முந்தைய போட்டியில் பயன்படுத்த முடியவில்லை. ஆனால் அவருடைய திறமையை பார்க்கும்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டு அவர் விளையாடுவார். இந்திய அணிக்காக விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது என்று ஹர்திக் பாண்டியா பாராட்டினார்.