மும்பை : ஐபிஎல் தொடரில் எப்போதுமே மும்பை இந்தியன்ஸ் அணி மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கும். மற்ற அணி வீரர்கள் 11 பேரை வைத்து விளையாடினால், மும்பை அணி மூன்று நடுவர்களையும் சேர்த்து 14 வீரர்களை வைத்து விளையாடுகிறார்கள் என்ற ரசிகர்கள் விமர்சிப்பது உண்டு.
இதற்கு காரணம் பல முடிவுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி டாசிலும் ஏமாற்று வேலை செய்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணி போட்டியில் டாசில் நடுவரை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. டாசை எடுத்த போட்டி நடுவர் ஸ்ரீநாத், ஹர்திக் பாண்டியாவுக்கு சாதகமாக டாசை மாற்றியதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆர்சிபி அணி கேப்டன் டுபிளசிஸ், வெளிப்படையாகவே ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது அந்த அணி கேப்டன் பாட் கம்மின்சிடம் கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐபிஎல் நிர்வாகம் ஒரு புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு முறையும் டாஸ் வீசும் போது நாணயம் பூ விழுந்திருக்கிறதா? இல்லை தலை விழுந்திருக்கிறதா? என்பதை கேமராவில் காட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்று மும்பை அணி பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் டாஸ் கீழே விழுந்ததும் அதை நடுவர் எடுப்பதற்கு முன்பு கேமராவில் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்த முறைக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு போட்டிக்கும் செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் வெளிப்படை தன்மை 100% இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதை சுட்டிக்காட்டி உள்ள சில ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியால் எந்த ஏமாற்று வேலையும் செய்ய முடியாதபடி ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விட்டதாக கிண்டல் அடித்திருக்கிறார்கள். இதனிடையே பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சாம்கரன் கேப்டனாக களம் இறங்கினார்.