மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி மீண்டும் ஆரம்ப கட்டத்தில் தடுமாறி பின் கடைசியில் அபாரமாக விளையாடி மீண்டும் வெற்றி அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கிறது. குறிப்பாக அந்த அணியில் களமிறங்கியுள்ள ஆஸ்டோஷ் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு போராடினார்.
எனினும் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம்கரன், வெற்றியின் அருகே வந்து கோட்டை விட்டோம் என்று கூறினார்.

இது குறித்து பேசிய அவர், எங்கள் அணிக்கு பரபரப்பான ஆட்டம் பிடித்து போய்விட்டது என நினைக்கின்றேன். நாங்கள் வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி விட்டோம். ஆஸ்டோஷ் சர்மாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாங்கள் தடுமாறிய போது அபாரமாக விளையாடி இலக்கு அருகே வரை கொண்டு வந்தார்.
இவ்வளவு அருகே வந்து தோற்றால் யாருக்குமே பிடிக்காது தான். நிச்சயமாக ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் இதயம் நொறுங்கி விட்டது. சாஷாங் மற்றும் ஆஸ்டோஷ் சர்மா இருவருமே அபாரமாக விளையாடி வருகிறார்கள். அவருடைய நம்பிக்கை அபாரமாக இருக்கிறது. ஆஸ்டோஷ் சர்மா விளையாடும் ஷாட்டுக்கள் எல்லாம் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் இவ்வளோ அருகே வந்தாலும் போட்டியை வெற்றியுடன் வீரர்கள் முடிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
மேலும் பேட்டிங்கின் முன் வரிசையில் நாங்கள் சொதப்பி வருகிறோம். அதில் நாங்கள் சரியாக விளையாடினால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். இந்தத் தொடரை எங்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் போல் இருக்கின்றது. முதலில் வெற்றி பெறுகிறோம். பிறகு போட்டிகளை தோற்கின்றோம். நாங்கள் தோற்கும் போட்டி எல்லாம் மிகவும் சிறிதளவில் வித்தியாசத்தில் தான் தோற்கிறோம்.
இது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது என்று ஷாம்கரன் கூறினார். இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்கள் இலக்காக வைத்திருந்தபோது, பஞ்சாப் அணி 49 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தற்போது ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.