மும்பை : இந்திய டி20 அணியில் முக்கிய இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜித்தேஷ் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறி வருகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜித்தேஷ் சர்மா 6 போட்டிகளில் மொத்தமாக 106 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இந்த சூழலில் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் நன்றாக விளையாடி வருவதால் டி20 உலக கோப்பையில் ஜித்தேஷ் சர்மாவுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று விளையாடுகிறது.

அப்போது முல்லான்பூரில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சூழலில் சூரியகுமார் யாதவ், ஜித்தேஷ் சர்மாவை சந்தித்து சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது பேசிய சூரியகுமார் யாதவ் நான் உன்னிடம் பலமுறை சொல்லிவிட்டேன். நீ உன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
நீ பேட்டை எடுக்கும் போதெல்லாம், ஒரு பந்துக்கு 12 ரன்கள் அடிக்க ஏன் முயற்சி செய்கிறாய் என்று கேள்வி எழுப்பினார். மேலும் டி20 கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும். நெருக்கடியான சூழலில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஜிதேஷ் சர்மாவுக்கு சூரியகுமார் யாதவ் அறிவுரை வழங்கினார்.
சூரியகுமார் யாதவின் இந்த அறிவுரை ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் விளையாட போகிறோம் என்று தெரிந்தும் சூரியகுமார் யாதவ், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதிரணியில் இருக்கும் இளம் வீரரும் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
ஜித்தேஷ் எதிரணி வீரராக இருந்தாலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கரிசனையில் சூரியக்குமார் அறிவுரை கூறியிருப்பதிலிருந்து அவருடைய நல்ல குணம் தெரிவதாக பலரும் பாராட்டி இருக்கிறார்கள். சூரிய குமார் யாதவின் இந்த அறிவுரையை கேட்டு இன்றைய ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மா ரன்கள் சேர்ப்பாரா டி20 உலக கோப்பையில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் ஐசிசி t20 உலக கோப்பை இந்திய அணியின் உத்தேச பட்டியலில் ஜித்தேஷ் சர்மாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.