மும்பை : மும்பை அணியின் இளம் பவுலரான ஆகாஷ் மத்வால் வீசிய 11 பந்துகளில் தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 33 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை விளாசியது. இந்த போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 4 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 53 ரன்களை விளாசி அசத்தினார். ஃபினிஷராக களமிறங்கி நீண்ட நாட்களுக்கு பின் தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் மற்றும் மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் இடையிலான போட்டி ரசிகர்களிடையே சுவாரஸ்யமாக அமைந்தது. இந்த போட்டியில் 16வது ஒவரை வீச ஆகாஷ் மத்வால் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் டூ பிளசிஸ் ஒரு ரன்னை எடுத்து எதிர் பக்கம் சென்றார்.
இதன்பின் 2வது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக், டி வில்லியர்ஸ் ஸ்டைலில் ஸ்கூப் அடித்து தேர்ட் மேன் திசையில் பவுண்டரி விளாசினார். தொடர்ந்து ஆகாஷ் மத்வால் ஒய்டு யார்க்கர் பந்துகளை வீச முயற்சிக்கிறார் என்பது தினேஷ் கார்த்திக்கிற்கு புரிந்தது. இதனால் மாற்று திட்டங்களுக்கு செல்லாமல், மீண்டும் ஸ்கூப் ஷாட் மூலமாக விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் பவுண்டரி அடித்தார்.
இதனையடுத்து ஆகாஷ் மத்வால் பந்தை வேகத்தை குறைத்து மித வேகமாக வீசினார். அப்போது மீண்டும் தேர்ட் மேன் திசையில் தினேஷ் கார்த்திக் பவுண்டரி அடிக்க, வான்கடே மைதானமே மிரண்டு போனது. பின்னர் தேர்ட் மேனை கொஞ்சம் பின் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் ஒய்டு யார்க்கர் வீசினார் ஆகாஷ் மத்வால். ஃபீல்டர்களை பற்றி கண்டுகொள்ளாத தினேஷ் கார்த்திக், மீண்டும் அதே திசையில் 4வது பவுண்டரியை விளாசினார்.
அதேபோல் கடைசி ஓவரில் மீண்டும் ஆகாஷ் மத்வால் பவுலிங் செய்ய வந்து தினேஷ் கார்த்திக்கிடம் மாட்டிக் கொண்டார். அந்த ஓவரில் 6,6,4 என்று தினேஷ் கார்த்திக் விளாசி தள்ளினார். இதன் மூலம் ஆகாஷ் மத்வால் வீசிய 11 பந்துகளில் மட்டும் தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 33 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இளம் வீரரை குறி வைத்து தினேஷ் கார்த்திக் செய்த மிரட்டல் சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.