மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் இளம் வீரர் ரஜத் பட்டிதர் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் பும்ரா வீசிய 3வது ஓவரில் விராட் கோலி 9 பந்துகளில் 3 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அறிமுக வீரர் வில் ஜாக்ஸ் 8 ரன்களில் வெளியேறினார்.

இதனால் ஆர்சிபி அணி 23 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதுமட்டுமல்லாமல் கேப்டன் டூ பிளசிஸ்-ம் பேட்டிங் செய்ய முடியாமல் தடுமாறி வந்தார். இந்த சூழல் இளம் வீரர் ரஜத் பட்டிதர் களமிறக்கப்பட்டார். இது ஆர்சிபி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளிலேயே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்டிதர், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 5 போட்டிகளிலும் பெரிதாக சோபிக்கவில்லை.
இதனால் சோசியல் மீடியாவில் ரஜத் பட்டிதர் கிண்டல் செய்யப்பட்டு வந்தார். 7 ஓவர்கள் வரை நிதானம் காத்த ரஜத் பட்டிதர், 8வது ஓவரில் இருந்து அதிரடிக்கு திரும்பினார். அதிலும் இஷ்டத்திற்கு ஷாட்களை விளையாடாமல், சரியான கிரிக்கெட் ஷாட்கள் மூலமாக பவுண்டரிகளை விளாசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பவுலிங்கில் அடுத்தடுத்து சிக்சரை விளாசி ரஜத் பட்டிதர் ஆச்சரியம் கொடுக்க, ஆர்சிபி அணியின் ஸ்கோரும் எகிறியது.
அதன்பின் மும்பை அணியின் கோட்ஸி வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். கோட்ஸி பந்தில் மிட் விக்கெட் திசையில் அடித்த சிக்சரை கண்டு விராட் கோலி உற்சாகமாகினார். ஆனால் அடுத்த பந்தில் பவுன்சர் வருவதை கணிக்காமல் அந்த பந்தை அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இதனால் 26 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையையும் ரஜத் பட்டிதர் பெற்றது குறிப்பிடத்தக்கது.