மும்பை : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியுள்ளது. வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது பேட்டிங்கின் போது அதிகளவு பனிப்பொழிவு இருக்கும் என்பதால், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், பவுலிங் செய்கிறோம். நிச்சயம் கடந்த போட்டியை போலவே பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் நாங்கள் இம்முறை சேஸிங் செய்கிறோம். நிச்சயம் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், சேஸிங் செய்வதே சரியாக இருக்கும். முதல் வெற்றிக்கு பின்னான அணியின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியில் சிறப்பாக தொடங்கி, எதிரணி மீது அழுத்தம் கொடுத்து, முன் நகர்ந்து செல்ல வேண்டும். கடந்த போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்காமல் மிகப்பெரிய இலக்கை நிர்ணயம் செய்தோம். அது எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. அதேபோல் பவர் பிளே பவுலிங்கில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பியூஷ் சாவ்லாவுக்கு பதிலாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் கோபால் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து டூ பிளசிஸ் பேசுகையில், இந்த போட்டிக்காக சில மாற்றங்களை செய்துள்ளோம். சில புதிய வீரர்களுக்கும், சீனியர் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தோம். அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வது அவர்களின் கடமை. குறைந்தபட்ச வாய்ப்புகளையாவது வழங்கி இருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஆனால் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை. அதனால் இது மாற்றத்திற்கான நேரம்.
எங்களிடம் கன்சிஸ்டன்சி இல்லை என்பது கவலையாக உள்ளது. அதனை மாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பிட்சில் சேஸிங் செய்வதே எங்களுக்கும் விருப்பம். ஆனால் பேட்டிங் செய்வதில் எந்த கவலையும் இல்லை. ஆர்சிபி அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜாக்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறார். அவர் 3வது வீரராகவும் களமிறங்குவார். அதேபோல் லோம்ரோர் மற்றும் விஜய்குமார் வைசாக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களுக்கு பதிலாக அனுஜ் ராவத், கேமரூன் க்ரீன் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.